கனவுகள் சிலருக்குச் சுகமானவையாகவும் வேறு சிலருக்குப் பெரும் நெருடல்களை அளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. அதிரவைக்கும் கனவுகளைக் கண்டு தூக்கம் தொலைத்த பலர் உண்டு! கனவுகள் ஏன் வருகின்றன, கனவுகள் பலிக்குமா, கனவுகளுக்கும் பலாபலன்கள் உண்டா, அவை என்னென்ன? இதுபற்றிய விவரங்களைப் பகிர்கிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

கனவுகள் வருவது ஏன்?
கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு.
நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு. மனம், ‘புரிதத்’ என்ற நாடியில் மறையும்போது உறக்கம் நிகழ்கிறது. புலன்கள் யாவும் அடித்துப் போட்டது போல் செயலற்று இருக்கும்போது மனம் விழித்துக் கொண்டு, தான் சேமித்த எண்ணங்களை அசைபோடுகிறது. அந்த நிகழ்வுகள் மனத்திரையில் பளிச்சிடுகின்றன...
அவையே நிஜத்தில் நிகழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்று ஸ்வப்ன சாஸ்திர வல்லுநர்கள் விளக்குவர்.

பொதுவாகக் கனவுகள் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. எனினும் இவற்றின் பாதிப்பினால் ஏற்படும் கனவுகளின் பலன்கள் சாதாரணமாகவே இருக்கும்.
கிரகங்களின் தசாபுக்தி காலங்கள் பாதிப்பு தரும் விதம் அமையும் நிலையில் அதற்கேற்ற கனவுகள் அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. கிரகங்களின் தசை, புக்திகளில் வரும் கனவுகள் அந்தந்த கிரகங்களோடு தொடர்புடையவையாக அமையும். அவற்றின் பலனும் குறைவு. இதேபோல் கவலையில் ஏற்படும் கனவுகளுக்கும் பலன் இல்லை.
கனவுகளிலும் பல வகைகள் உண்டா?
உண்டு
திரிஷ்டம்: உலகில் பார்த்தவற்றை - சந்தித்த நிகழ்வுகளைக் கனவுகளில் காணுதல்
ஷ்ருதம்: தான் கேள்விப்பட்டவற்றை கனவில் காணுதல்
அனுபூதம்: தொடவும், முகரவும், ருசிக்கவும் கூடிய தன்மை கொண்டவற்றைக் காணுதல்
பிராதிதம்: ஆசைப்பட்டவற்றைக் காணுதல்
கல்பிதம்: கற்பனைப் பொருள்கள், நிகழ்வுகள்.
பாவிஜம்: மேலே உள்ள எதிலும் சேராதவை.
தோஷஜம்: திரிதோஷங்களின் பாதிப்பில் ஏற்படும் கனவுகள்.

கனவுகள் பலிக்குமா?
1. பகல் நேரத்தில் காணும் கனவுகள்
2. காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள்.
3. நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள்.
4. நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள்.
இப்படியான கனவுகள் பலிக்காது. அதேநேரம் அதிகாலைப் பொழுதில் காணும் கனவுகள் அடுத்து வரும் நாள்களில் பலிக்கும் என்கிறது சாஸ்திரம்.
எத்தனை நாள்களில் கனவு பலிக்கும்?
ஓர் இரவு என்பது நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில், முதலாம் யாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்துக்குள்ளும், 2-ம் யாமத்தில் கண்ட கனவு 8 மாதத்துக்குள்ளும், 3-ம் யாமத்தில் கண்ட கனவு 3 மாதத்துக்குள்ளும், 4-ம் யாமத்தில் கண்ட கனவு 10 நாள்களுக்குள்ளும், அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும்.
கனவில் முன்னோரைக் கண்டால் என்ன பலன்?
நம் கனவில் முன்னோர்கள் வருவது அல்லது குலதெய்வம் தோன்றுவது ராகு - கேதுவின் அமைப்பைக் குறிக்கும். அவர்கள் மஞ்சள், பால், தேன், பட்டு, நெய், வெண்ணெய், இனிப்பு, பழங்கள், காய்கறிகள், அரிசி போன்ற பொருள்களைக் கேட்டால், அது நமக்கு வாழ்வில் ஏற்றத்தைத் தரக்கூடிய கனவாகும். அவர்கள் விகாரமாக சிரிப்பது அல்லது புன்னகை தருவது நல்லதல்ல. அவர்கள் அழுதால், அந்தக் கனவு நமக்கு ஒரு சுப விரயத்தைக் குறிக்கும்.
சித்தர், ஞானிகள், சந்நியாசிகள், மயில், சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற வஸ்திரங்கள் நம் கனவில் தோன்றுவது செவ்வாயைக் குறிக்கின்ற அமைப்பு. இது ஒரு மனிதனுக்கு நிலம், வீடு, கன ரக இயந்திரம் மற்றும் அது சார்ந்த சுப காரியங்களைக் குறிக்கும்.

தெய்வங்களைக் கனவில் காணலாமா?
நாம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதன் சம்பந்தமான கனவுகளே பெரும்பாலும் வருவது உண்டு. கனவில் தெய்வம் தெரிகிறது எனில் இறைச் சிந்தனை மிகுந்திருக்கிறது எனப் பொருள். ஆகவே, தெய்வ அருள் சேரும்; விரைவில் மங்கலகரமான செய்திகள் வரப் போகின்றன என்று அறியலாம்.
நல்ல கனவு அல்லது கெட்ட கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும்?
நல்ல கனவுகள், சாதகமான கனவுகளைக் கண்டவர் உடனடியாக விழித்து எழுந்து, குளித்து இறைவனை வணங்கி, பின் அந்த இரவு முழுவதையும் தூங்காமலே கழிக்க வேண்டும்.
கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால் உடன் எழுந்து கை, கால்கள் சுத்தம் செய்து திருநீறு அணிந்து, தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்க வேண்டும். கனவுகள் கண்டபிறகு, மறுபடியும் தூங்கிவிட்டால் கனவின் பலன் குறைவு. அச்சப்படுத்தும் வகையில் தீய கனவுகள் கண்டால் தானம், வழிபாடு, மந்திர ஜபம், யாகம், தியானம் போன்றவற்றைச் செய்து, வரப்போகும் கெடு பலனைக் குறைக்கலாம்.
கருத்துரையிடுக