Top News

மேல்மலையனூர்: பார்வதியுடன் பாலகணபதி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூடம் ஏற்றி அம்மன் தரிசனம்!!

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் - 2) இரவு ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தை காண விழுப்புரம், திருவண்ணாமலை,கடலூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு மங்கள மேளதாளம் இசைக்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் பார்வதியுடன் பாலகணபதி (கணேச ஜனனி) சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 

அங்காளம்மா.., அங்காளம்மா.. என எலுமிச்சை, தேங்காயில் சூடம் ஏற்றி மனமுருகி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர், ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை ஏற்றப்பட்டு 11.10 மணிக்கு உற்சவர் அங்காளம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் பக்தர்களின் வருகைக்காக வேண்டி தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை