விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமாகும். இங்கு ஸ்ரீமந் நாராயணன் வடபத்ரசாயி என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். இத்தலம் 12 ஆழ்வார்களில், இரண்டு ஆழ்வார்கள் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார், மற்றும் அவர் திருமகளாய் தோன்றிய ஆண்டாளும் அவதரித்த பெருமையுடையது.
மேலும் ஸ்ரீஆண்டாளின் ஆடிப்பூர உற்சவத்திற்கு முன்பு அவரை வளர்த்தெடுத்த அவரது தந்தையான பெரியாழ்வார் அவதார உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன் அடிப்படையில் பெரியாழ்வார் அவதாரத் திருநாளான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விமர்சையாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் பட்டாச்சாரியார் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


விழா நாள்களில் தொடர்ந்து பெரியாழ்வார் காலை வேளைகளில் கோயிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் எழுந்தருளல், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி புறப்பாடு ஆகியவையும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் 9-ம் திருநாள் அன்று ஜூலை 7 - ம் தேதி நடைபெறுகிறது.
from விகடன் https://ift.tt/xt7RhMP
via IFTTT
கருத்துரையிடுக